விளையாட்டு

'யோயோ' சோதனையில் தோல்வியடைந்த வருண் சக்கரவர்த்தி!

jagadeesh

உடற்தகுதி சோதனையை நிரூபிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் யோயோ சோதனையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தோல்வியடைந்தார்.

தோள்பட்டை காயம் குணமடையாத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருசில டி20 போட்டிகளில் தமிழக வீரர் நடராஜன் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இதேபோல, உடல்தகுதி பெறாததால், மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

முதல் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில், காயத்திலிருந்து குணமடைந்ததால் அணியில் சேர்க்கப்பட்ட தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் யார்க்கர் மன்னன் நடராஜன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டனர். இதில் யோயோ பயிற்சியில் வருண் சக்கரவர்த்தி தேர்ச்சியடையாததால், இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.

அவருக்குப் பதில் ராகுல் சஹார் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது. இதேபோல தோள்பட்டை காயம் குணமடையாத நிலையில், தமிழக வீரர் நடராஜனும் ஒருசில போட்டிகளில் விளையாடமாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.