விளையாட்டு

மதுரை: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பாராட்டை பெற்ற டேக்வாண்டோ வீரர்

kaleelrahman

டேக்வாண்டோ கலையில் சிறந்து விளங்கும் மதுரையைச் சேர்ந்த வீரரை பாராட்டி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சான்றிதழ் அளித்துள்ளார்.

கொரிய நாட்டு தற்காப்புக் கலையான டேக்வாண்டோ விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்ட பின்னர் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதிலும் தற்போது பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பள்ளி கல்லூரிகளில் அதிகஅளவில் ஆர்வமுடன் கற்றுக்கொடுப்பதோடு உலக அளவிலான டேக்வாண்டோ போட்டிகளும் இந்தியாவில் நடத்தப்படுகின்றன.

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜியரான நாராயணன் டேக்வாண்டோ கலையை தனது 23வது வயதில் கற்கக் கொள்ளத் தொடங்கினார். 90%கால்களை மட்டுமே பயன்படுத்தி விளையாடும் இந்த டேக்வாண்டா கலையை திறம்பட கற்றதோடு 16- கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் டேக்வாண்டோவை கற்றுக்கொடுக்க அகாடமி ஒன்றை நடத்திவருகிறார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபரின் கீழ் செயல்படும் US PRESIDENT COUNCIL FOR SPORTS AND FITNESS என்கிற அமைப்பில் நாராயணன் தனது பெயரை பதிவுசெய்து தினசரி தான் செய்யும் டேக்வாண்டோ பயிற்சிகள் குறித்து பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அந்தஅமைப்பு நாராயணனின் திறமையை பாராட்டி அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்பின் கையெழுத்திட்ட பாராட்டு சான்றிதழை அளித்து கௌரவித்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு பிரச்சார யுக்திகளை கையிலெடுத்துவரும் நிலையில் மதுரையை சேர்ந்த நாராயணனுக்கு அமெரிக்க அதிபரின் கீழ் இயங்கும் விளையாட்டு அமைப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முன்னாள் அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா கையெழுதிட்ட பாராட்டு சான்றிதழையும் ஏற்கனவே நாராயணன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.