விளையாட்டு

என்னங்க பிட்ச் இது?: உமேஷ் யாதவ் ஆதங்கம்!

என்னங்க பிட்ச் இது?: உமேஷ் யாதவ் ஆதங்கம்!

webteam

'ஐதராபாத் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கோ, சுழற்பந்துவீச்சுக்கோ உதவவில்லை’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் கூறினார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் இடம்பிடித்திருந்தார். உமேஷ் யாதவ் உடன் புதுப்பந்தில் பந்து வீச்சை தொடங்கிய அறிமுக வீரரான ஷர்துல் தாகூர் 10 பந்துகள் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். இதனால், உமேஷ் யாதவ் மட்டுமே வேகப்பந்து வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாளில் 95 ஓவர்கள் விளையாடி, 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்துள்ளது. ரோஸ்டன் சேஸ் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்களை சாய்த்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உமேஷ் யாதவ், ‘பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ரன்களை கட்டுப்படுத்து வது கடினம்’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் ’எஸ்ஜி’ பந்துகளை கொண்டு வழக்கம் போல ஸ்விங் செய்யவோ, ரிவர்ஸ் ஸ்விங்க் செய்தோ பந்துவீச முடியவில்லை. முதல் 20 ஓவர்களுக்குப் பிறகு பந்து மிருதுவான தன்மைக்கு மாறிவிட்டது. ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கோ அல்லது சுழல் பந்துவீச்சுக்கோ உதவவில்லை. இந்த ஆடுகளத்தில் ரன்களை கட்டுப்படுத்துவது கடினம்’ என்றார்.