விளையாட்டு

அனல் பறக்கும் ஐபிஎல் தொடர்: இன்று இரண்டு முக்கியமான போட்டிகள்

jagadeesh

அனல் பறக்கும் ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

ஷார்ஜாவில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி நடப்பு சீசனில் விளையாடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ரோகித் தலைமையிலான மும்பை அணி 11 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகிறது. 

இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை 16 முறையும், டெல்லி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பிளே ஆஃப் பந்தயத்தில் தொடர்ந்து பயணிக்க இன்றைய போட்டி மும்பை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு சீசனில் விளையாடிய 11 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் பிளே ஆஃப்புக்குள் ஏற்கெனவே நுழைந்து விட்டது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை 15 முறையும், ராஜஸ்தான் 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன.