’சுழல் பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா சிறப்பானவர்கள். அவர்களை எதிர்கொள்ள திட்டம் வைத்திருக்கிறோம்’ என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால் கூறினார்.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இலங்கை வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் கூறும்போது, ’இந்திய மண்ணில் எனக்கு இது முதல் டெஸ்ட் போட்டி. எங்கள் அணியில் உள்ள மேத்யூஸ், ஹெராத் தவிர அனைவருக்குமே இங்கு முதல் டெஸ்ட் போட்டிதான். இந்தியா வருவதற்கு முன் பாங்காக்கில் நாங்கள் சிறப்பான பயிற்சியில் ஈடுபட்டோம். இந்தப் போட்டியில் சில புதுமுகங்கள் களமிறங்குகிறார்கள். அவர்கள் தங்கள் பங்கை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆறு பேட்ஸ்மேன்கள் மற்றும் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி வெற்றிகண்டோம். கடும் வெயில் காரணமாக நான்கு பந்துவீச்சாளர்களுடன் அங்கு வெற்றி பெறுவது கஷ்டமானது. ஆனால் இந்திய அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதனால் ஐந்தாவது இடத்துக்கு ஆல்ரவுண்டரை தேர்வு செய்வது பற்றி பிட்சை பார்த்தபின் முடிவு செய்வோம். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா இருவரும் உலகின் சிறந்த வீரர்கள். அவர்களின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்கும் திட்டம் வைத்திருக்கிறோம். இந்திய மண்ணில் நாங்கள் டெஸ்ட் போட்டியில் வென்றது இல்லை. இங்கு வெல்வது எங்கள் கனவு’ என்றார்.