விளையாட்டு

“உலகக் கோப்பை பதக்கம் களவு போனது” - பால் போக்பா

EllusamyKarthik

அண்மையில் தனது வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தனது உலகக் கோப்பை சாம்பியன் பதக்கம் திருடு போயுள்ளதாக தெரிவித்துள்ளார் பிரான்ஸ் நாட்டு கால்பந்து வீரர் பால் போக்பா. 29 வயதான அவர் 2018-இல் உலகக் கோப்பையை வென்ற அணியில் விளையாடி இருந்தார். மிட்-ஃபீல்டரான அவர் அந்த தொடரில் ஒரே ஒரு கோலை பதிவு செய்திருந்தார். அந்த கோலை அவர் இறுதிப் போட்டியில் பதிவு செய்திருந்தார். 

“அந்த சம்பவத்தின் போது எனது இரண்டு குழந்தைகள் வீட்டில் வேலை பார்க்கும் நபருடன் இருந்தனர். அது தான் எனக்கு மிகவும் அச்சத்தை கொடுத்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து வேலை பார்க்கும் நபர் இன்னும் மீளவில்லை. அவர் சொல்லிய பிறகே வீட்டில் இது நடந்தது எங்களுக்கு தெரிய வந்தது.

லாக்கரில் இருந்த எனது அம்மாவின் நகைகள் மற்றும் 2018-இல் நான் வென்ற உலகக் கோப்பையும் இதில் களவு போயுள்ளது” என தெரிவித்துள்ளார் போக்பா. 

தற்போது பிரான்ஸ் நாட்டு அணியுடன் இணைந்துள்ள அவர் ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட உள்ளார்.