விளையாட்டு

அதிக ஏலத்திற்கு எடுத்த வீரர்கள் சாதிக்கிறார்களா? ஐபிஎல் தொடர் ஒருபார்வை

webteam

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலமெடுக்கப்பட்டும், குறிப்பிடத்தக்க அளவில் சாதிக்காத விரர்கள் குறித்து பார்க்கலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 8.4 கோடி ரூபாய்க்கு இந்திய இடதுகை வேகபந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாட்கட்டை ஏலத்தில் எடுத்தது. நடப்புத் தொடரில்‌ அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், அதிக ரன்கள் கொடுக்கும் வள்ளலாக மாறியுள்ளார் உனாட்கட்.

தமிழகத்தை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, பஞ்சாப் அணிக்காக 8.4 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். பிரபலமாகாத வருண் அதிக விலைக்கு எடுக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. நடப்பு தொடரில் பஞ்சாப் அணியின் முதல் போட்டியில் மட்டும் விளையாடிய இவர், அந்தப்போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் களமிறங்கும் வீரர்களிலிருந்து நீக்கப்பட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இருபது ஓவர் உலகக்கோப்பையில் கதாநாயகனாக திகழ்ந்த கார்லஸ் பிராத்வேய்ட், கொல்கத்தா அணிக்காக 5 கோடி ரூபாய்க்கு ஏலமெடுக்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ள இவர், ஒற்றை இலக்கை கடக்காமல் உள்ளார்.

சென்னை வீரர் மோகித் சர்மா, 5 கோடி ரூபாய்க்கு ஏலமெடுக்கப்பட்டவர். நடப்புத் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி, அப்போட்டியில் அதிக ரன்கள் வாரி இறைத்ததால் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். இந்திய இளம் விக்கெட் கீப்பர் சிம்ரன் சிங், பஞ்சாப் அணிக்காக 4.8 கோடி ரூபாய்க்கு எலமெடுக்கப்பட்டார். ஆனால் நடப்புத் தொடரில் ஒரு போட்டியில் கூட சிம்ரன் சிங் களமிறக்கப்படவில்லை. இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் விளையாடி வருகிறார்.

பெங்களூரு அணிக்காக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் சிம்ரான் ஹெட்மயர், 4.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ஹெட்மயர், ஒரு போட்டியில் கூட ஒற்றை இலக்கை கடக்கவில்லை. ஏலத்தில் ஏக வரவேற்பை பெற்ற வீரர்கள், களத்திலும் சாதிப்பார்களா என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.