விளையாட்டு

'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் !

'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் !

இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத நாள் அது. மகேந்திர சிங் தோனி என்ற ஜாம்பவான் வீறு கொண்டு எழுந்து அடித்து நொறுக்கிய அந்த நாள். ஆம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சரி, தோனிக்கும் சரி விசாகப்பட்டினத்தை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. தோனி தன்னுடைய முதல் சதத்தை பாகிஸ்தானுக்கு எதிராக விளாசியது விசாகப்பட்டினத்தில்தான். இது நிகழ்ந்தது 13 ஆண்டுகளுக்கு முன்பு. இதன் பின்பு தோனி விசாகப்பட்டினத்தில் மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி மொத்தம் 250 ரன்கள் எடுத்துள்ளார். இதில் சராசிரியாக 80 வைத்துள்ளார், ஸ்டிரைக் ரேட் 100-ஐ தொட்டுள்ளது. இதிலிருந்தே தெரிகிறது தோனிக்கு விசாகப்பட்டினம் ஆடுகளம் அவருக்கு மிகவும் பிடித்ததில் ஒன்று.

இந்த வரலாற்றுடன்தான் இந்தியா தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை விசாகப்பட்டினத்தில் இன்று எதிர்கொள்கிறது. இதை வைத்துதான் பிசிசிஐ தன் ட்விட்டர் பக்கத்தில் "ராஜா திரும்ப வந்துவிட்டார்" என பதிவிட்டு விசாகப்பட்டினத்தில் தோனி இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தது.

ஒரு பிளாஷ்பேக் !

பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் ஏப்ரல் 5, 2005 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அன்றைய நாளுக்கு பின்பு அனைத்து ஊடகங்களும் தோனியை புகழ்ந்து கொண்டிருந்தன. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்தியாவுக்காக தோனி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அன்றைய போட்டிக்கு முன்பு வரை அவரின் அதிகபட்ச ரன் 12 மட்டுமே. தோனி தான் பங்கேற்ற முதல் போட்டியில் துரதிஷ்டவசமாக ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகியிருந்தார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் அப்போது நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி பேட்டிங் செய்ய தீர்மானித்து, சேவாக்கும், சச்சினும் களமிறங்கினர். இந்தப் போட்டியில் சச்சின் 4 ஆவது ஓவரில் அவுட்டானார். அடுத்து ராகுல் டிராவிட் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில், கழுத்து வரை தொங்கும் முடியுடன் ஒரு வீரர் களமிறக்கப்பட்டார். அவர்தான் மகேந்திர சிங் தோனி. இந்தப் போட்டிக்கு முன்பு வரை தோனி 7 ஆவது வீரராகவே பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தோனியை மூன்றாவது வீரராக களமிறக்கும் திட்டத்தை திடீரென கையில் எடுத்தார் கங்குலி. கங்குலியின் அந்த முடிவுதான் தோனியின் வாழ்கையை மாற்றியது. ஆம், அந்தப் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடினார் தோனி. அந்தப் போட்டியில் 148 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார் தோனி. அதன் பின்பு நடந்தது எல்லாம் வரலாறு. இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் அப்ரிதி, சோயப் மாலிக், சமி, ரசாக் என்றும் பாராமல் துவைத்து எடுத்தார். தோனியின் இந்த அதிரடி ஆட்டத்தை பாகிஸ்தான் வீரர்கள் எதிர்பார்க்காததால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றனர்.

இறுதியில் இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 298 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. தோனியை ஏன் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார் என்பதற்கு சவுரவ் கங்குலி அளித்த பதில் "தோனி ஒரு ஆக்ரோஷமான வீரர் என்று எனக்கு தெரியும். அவரின் இளமையையும் வேகத்தை பயன்படுத்த நினைத்தேன். அதனால்தான் அவரை டிராவிட்டுக்கு முன்னதாக களமிறக்கினேன்" என்றார் அவர். 

2005 ஆம் ஆண்டில் தோனி தன்னுடைய முதல் சதத்தை அடிக்கும்போது அவரின் வயது 24, இப்போது வயது 37. இந்த சதத்துக்கு பின் பல்வேறு சாதனைகளை படைத்துவிட்டார், அடுத்து என்ன என்று கேட்டாலும் புன்னகையைதான் பதிலாக தருவார் தோனி. அப்படிப்பட்ட விசாகப்பட்டினத்தில் இன்று தோனி மீண்டும் சதம் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.