விளையாட்டு

“நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை; உங்களை மிஸ் செய்கிறேன்” - வார்னர் உருக்கமான பதிவு

kaleelrahman

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் வெள்ளிக்கிழமை இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்ச்சிபூர்வமான செய்தியை வெளியிட்டார், அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹைதாராபாத் அணி நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் நேற்று விளையாடிய நிலையில், இந்தப் பதிவினை அவர் வெளியிட்டுள்ளார். அவர் செப்டம்பர் 25 அன்று ஹைதராபாத் அணிக்காக தனது கடைசி போட்டியை பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக விளையாடினார். அதன் பிறகு நடைபெற்ற போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.

வார்னர் தன்னுடைய இன்ஸ்டா பதிவில், “அற்புதமான நினைவுகளை உருவாக்கிய உங்களுக்கு எனது நன்றிகள். எங்களுடைய அனைத்து ரசிகர்களே, எங்கள் அணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து 100 சதவீத உந்து சக்தியாக இருந்தது நீங்கள்தான். நீங்கள் அளித்து வந்த ஆதரவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இது ஒரு சிறப்பான பயணமாக இருந்து வந்தது. நானும் எனது குடும்பத்தாரும் உங்களை மிஸ் செய்யப் போகிறோம்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபாத் அணியில் வார்னர், நடப்பு சீசனில் ஒரு சிக்கலான பயணத்தை தொடர்ந்து வந்தார். அவர் முதலில் கேப்டன் பதவியை பறிகொடுத்தார். இடது கை ஆஸ்திரேலிய தொடக்க வீரரான வார்னர் இந்த ஆண்டு ஐபில் போட்டிகளில் பங்கேற்ற வார்னர் 8 போட்டிகளில் இரண்டு அரை சதங்களுடன் 195 ரன்கள் மட்டுமே எடுத்து தனது மோசமாக ஆட்டத்தை பதிவு செய்தார். எஸ்ஆர்எச் அணி இந்த சீசனில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

வார்னர் ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்து சாதனையைப் படைத்தவர், ஐபிஎல்லில் வெறும் 95 போட்டிகளில் 49.55 சராசரியாக 4014 ரன்கள் எடுத்தார். 2014 ஆம் ஆண்டில் எஸ்ஆர்எச் அணியில் இணைந்ததிலிருந்து அவர் இரண்டு சதங்கள் மற்றும் நாற்பது அரைசதங்களை அடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி கோப்பையை வென்றபோது எஸ்ஆர்எச் அணிக்கு கேப்டனாக இருந்தார்.