விளையாட்டு

மும்பையை வீழ்த்தியது சென்னை அணி! புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணிக்காக டிகாக் மற்றும் அன்மோல்பிரீத் சிங் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

இன்னிங்ஸின் 14-வது பந்தில் டிகாக், LBW முறையில் வெளியேறினார். தொடர்ந்து அன்மோல்பிரீத் சிங், சூரியகுமார் யாதவ் என இருவரும் விக்கெட்டுகளை இழந்தனர். பவர் பிளே ஓவர் முடிவில் மும்பை அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 41 ரன்களை எடுத்திருந்தது. 

தொடர்ந்து ஈஷன் கிஷன், பொல்லார்ட், குர்ணால் பாண்ட்யா என மூவரும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் களத்தில் சவுரப் திவாரி பொறுப்புடன் விளையாடினார். அவருக்கு கைகொடுக்க மறுமுனையில் பேட்ஸ்மேன்கள் யாரும் அணியில் இல்லை. அதனால் பவுலர்களுடன் இறுதி ஓவர்களில் ரன் சேர்க்க முயற்சித்தார். இருந்தும் அது தோல்வியில் முடிந்தது.  

சென்னை அணிக்காக தீபக் சஹார், ஹேசல்வுட், தாக்கூர், பிராவோ மாதிரியான வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் ஆறாவது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் டெல்லியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது.