விளையாட்டு

தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் இன்னொரு தமிழர்!

webteam

தென்னாப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில், தமிழர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார். 

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் பல்வேறு நாடுகளில் கிரிக்கெட் வீரர்களாக உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்க உட்பட பல நாட்டு கிரிக்கெட் அணிகளிலும் அவர்கள் விளையாடி வந்துள்ளனர். வருகின்றனர். அதில் சில தமிழர்களும் இருக்கிறார்கள்.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை, கனடா அணிகளில் பல தமிழர்கள், கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். 

அந்த வரிசையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் ஏ அணியில் இடம் பிடித்திருக்கிறார், எஸ்.முத்துசாமி. இவரது முழுப் பெயர் சீனுராம் முத்துசாமி! ஏற்கனவே தென்னாப்பிரிக்க ஜூனியர் அணியில் (19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி) ஜிவேஷன் பிள்ளை என்ற தமிழர் இடம்பெற்றுள்ள நிலையில் முத்துசாமியும் இடம்பெற்றிருப்பது தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

24 வயதான இந்த முத்துசாமி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கும் ஆல் ரவுண்டர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர், டர்பனில் பிறந்தவர். இடது கை வீரரான இவர், முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பான ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். சுழல் பந்துவீச்சிலும் ரெக்கார்ட் வைத்துள்ளார்.

58 போட்டிகளில் விளையாடி 2990 குவித்துள்ள முத்துசாமி அதிகப்பட்சமாக 181 ரன்கள் எடுத்துள்ளார். 58 போட்டிகளில் 104 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். டால்பின்ஸ் அணிக்காக ஆடும் அவர், கடந்த வருடத்தின் சிறந்த வீரர் விருதையும் பெற்றுள்ளார்.

இப்போது தென்னாப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி, இந்திய போர்டு பிரசிடெண்ட் லெவன் அணியுடன் விளையாட இந்தியா வந்துள்ளது. அந்த அணியில் முத்துசாமி இடம் பிடித்துள்ளார்.