இந்தூரில் இன்று தொடங்கும் விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை போட்டியில் தமிழகம் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தமிழகம் முதலில் பீல்டிங் செய்கிறது.
38 அணிகள் கலந்து கொள்ளும் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி 6 நகரங்களில் இன்று தொடங்கியுள்ளது. 19-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மார்ச் 14 ஆம் தேதி வரை நடக்கிறது. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் சூரத், இந்தூர், பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை ஆகிய 6 நகரங்களில் நடக்கிறது. 'நாக்-அவுட்' சுற்று ஆட்டங்கள் மார்ச் 7 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘எலைட் ஏ’ முதல் ‘இ’ வரையிலான பிரிவில் தலா 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பிளேட்’ பிரிவில் 8 அணிகள் அங்கம் வகிக்கின்றன. 5 முறை சாம்பியனும், கடந்த முறை 2-வது இடத்தை பெற்ற தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட், விதர்பா, ஆந்திரா ஆகியவை அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். இந்த பிரிவினருக்கான ஆட்டம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நடக்கிறது.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ‘எலைட்’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். அத்துடன் அந்த பிரிவில் 2-வது இடத்தை பிடிக்கும் இரண்டு சிறந்த அணிகளும் கால்இறுதிக்குள் நுழையும். மேலும் 2-வது இடத்தை பிடிக்கும் 3-வது சிறந்த அணி, ‘பிளேட்’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி கடைசி அணியாக கால்இறுதிக்கு முன்னேறும்.
அதன்படி இன்று காலை இந்தூரில் தொடங்கிய ஆட்டத்தில் தமிழகம் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடி வருகிறது. ஐபிஎல் போட்டி தொடருக்கு முன்பாக இந்தப் போட்டிகள் நடைபெறுவதால் ஒவ்வொரு மாநில வீரர்களும் தங்களது திறனை வெளிப்படுத்தவர் என எதிர்பார்க்கப்படுகிறது