ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன் வெல்த் போட்டியில் பளூ தூக்குதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சதீஷ்
குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சத்துவாச்சாரிதான் சதீஷ் குமாரின் சொந்த ஊர். தந்தை சிவலிங்கம், தாய் தெய்வானை. முன்னாள் ராணுவ வீரரான சிவலிங்கமும் பளுதூக்குதல் வீரர். மிகவும் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் 1985 முதல் 2001 வரை பணி புரிந்தார் சிவலிங்கம்.
1986 -ல் தேசிய அளவில் நடந்த பளுதூக்கும் போட்டியில் சிவலிங்கம் முதலிடம் பெற்றார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்
தனது மூத்த மகன் சதீஷ் குமார் பளுதூக்குதலில் ஆர்வமிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனது பணிச்சூழல் காரணமாக விடப்பட்ட
பளுதூக்குதல் சாதனை கனவை மகன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள விரும்பினார் சிவலிங்கம். இதற்காக சதீஷ்குமார் 6-ம் வகுப்பு படிக்கும்போதே பளு தூக்குதல் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். 12 வயது முதல் சதீஷ்குமாருக்கு பயிற்சி அளித்தார். அந்த வயதில் சதீஷ் 15 கிலோ தூக்கியுள்ளார். சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது மாவட்ட அளவில் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்குதலையும் சேர்ந்தார் சதீஷ் குமார்.
தினமும் 5 மணி நேர கடின பயிற்சி களை தனது தந்தையின் மேற்பார்வையில்மேற்கொள்வார் சதீஷ் குமார். இதில் 2006, 2007 ஆண்டுகளில் மாவட்ட அளவில் நடந்த போட்டி களில் 50 கிலோ எடை தூக்கி முதலிடம் பெற்று தனது பயணத்தை தொடங்கினார் சதீஷ். அதன் பின்னர் மாநில அளவில், தென்னிந்திய அளவில், தேசிய அளவில் என்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் குவிக்க தொடங்கினார். இதனால் பி.ஏ.வரலாறு 3-ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே விளையாட்டு இடஒதுக்கீடு மூலம் தெற்கு ரயில்வேயில் எழுத்தர் பணி சதீஷை தேடி வந்தது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பணியில் சேர்ந்தார். தொடர்ந்து தெற்கு ரயில்வே அணி வீரராக களத்தில் இறங்கினார். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றார். இதன் மூலம் இந்தியா சார்பில் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வந்தது. 2010 ம் ஆண்டு பல்கோரியாவிலும், 2011 ம் ஆண்டு தென்கொரியாவிலும் நடந்த ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டார். 2012-ம் ஆண்டு அபியாவில் நடந்த பளுதூக்கும் போட்டியிலும், 2013 ம் ஆண்டு நடந்த பளுதூக்கும் போட்டியிலும் தங்கம் வென்றார்.
திருப்பமுனை
22 வயதில் சதீஷ் குமாரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற
காமன்வெல்த் போட்டியில், ஆடருவக்கான பளு தூக்குதல் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இந்த போட்டியில் அவர் 328 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார். இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை கைப்பற்ற சகநாட்டை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடமே சதீஷ் குமாருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. ஸ்னாட்ச் பிரிவின் ஆரம்பம் 142 கிலோ எடையைத் தூக்குவது. இதில் பல நாடுகளின் வீரர்களும் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் எவ்வித சிரமுமின்றி சதீஷ் தூக்கினார். அதேசமயம், ரவிக்குமார்பின்னடைவைச் சந்தித்தார். இருப்பினும், 2-வது வாய்ப்பில் அந்த எடையை அவர் தூக்கினார்.
ஆனால் தனது 2-வது வாய்ப்பில் 146 கிலோ எடையைத் தூக்கி மிரளச் செய்தார் சதீஷ். கடைசி வாய்ப்பில் 147 கிலோ எடையைத் தூக்க
முயன்றதில் தோல்வியையே சந்தித்தார் ரவிக்குமார். ஆனால் காமன்வெல்த்தின் சாதனையான 148 கிலோ எடையை முறியடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார் சதீஷ். அவ்வாறே தனது முயற்சியில் 149 கிலோ எடையைத் தூக்கி புதிய சாதனை படைத்து வரலாற்றுப்
பக்கத்தில் இடமும் பிடித்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவிலும் இருவருக்கும் இடையேதான் கடும்போட்டி
நிலவியது. இதில், சதீஷுக்கு முன்னே எடையைத் தூக்க வந்த ரவிக்குமார், முதல் வாய்ப்பில் 175 கிலோ எடையைத் தூக்கினார். அதீத
நம்பிக்கையுடன் 178 கிலோ எடைகள் போடப்பட்ட கம்பியைத் தொட்டு சதீஷ் தூக்கியதை தவறானது என நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் சற்றும் மனம் தளராத அவர், மறுவாய்ப்பில் 179 கிலோ எடையைத் தூக்கி ஒட்டு மொத்த அளவில் முதல் இடத்தைப் பிடித்தார், இப்பிரிவின் 2-வது வாய்ப்பில் 185 கிலோ தூக்கி தங்கம் வெல்லலாம் என முயன்ற ரவிக்குமாருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதனால், சதீஷுக்கு தங்கம் உறுதி செய்யப்பட்டது. 2-வது வாய்ப்பில் 186 கிலோ எடையைத் தூக்கி ஒட்டு மொத்த அளவிலான காமன்வெல்த் சாதனையை முறியடிக்க சதீஷ் முயன்றார் ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
இதன் மூலம் காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் தங்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற சாதனையை படைத்தார். இப்போது
காமன் வெல்த் போட்டியில் இரண்டாவது தங்கமும் பெற்று அசத்தியுள்ளார். இந்தியாவுக்கு கிடைத்த சதீஷ் எனும் தங்கமகன், தமிழக
மக்களுக்கு வைரம் போன்ற மதிப்புமிக்கவர்.