’மிஸ்டர் ஐபிஎல்’ என புகழப்படும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 இன்னிங்ஸ்களில் 1 சதம் மற்றும் 39 அரைசதங்களுடன் 5528 ரன்களை குவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், சென்னை அணி தடைசெய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளில் குஜராத் லயன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
சென்னை அணிக்காக சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் பங்கேற்று சதம் விளாசியிருக்கும் ரெய்னா, சென்னை அணியின் மிகச்சிறந்த வீரராக இன்றளவும் போற்றப்பட்டுவருகிறார்.
இந்த சூழலில் சமீபத்திய உரையாடலில் பேசியிருக்கும் ரெய்னா, ஐபிஎல்லில் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிஎஸ்கேவில் இல்லாமல், வேறு அணிக்கு விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் மும்பைக்கு விளையாடுவீர்களா அல்லது பெங்களூருவிற்கு விளையாடுவீர்களா என கேள்வி எழுப்ப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரெய்னா, மும்பையை தேர்வு செய்தார். தானும், ரோகித்தும் இணைந்து விளையாடுவதும், வான்கடேவில் பேட் செய்வதும் சிறப்பாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.