இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது நண்பருமான வினோத் காம்ப்ளி இந்தியாவுக்காக 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். சிறுநீர் தொற்று மற்றும் தசைப்பிடிப்பு காரணமாக தானேயில் உள்ள அக்ருதி மருத்துவமனையில் கடந்த ஆண்டு இறுதியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில், காம்ப்ளி கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார். இதையடுத்து அவருக்கு உதவ முன்னாள் இந்திய வீரரும் பிரபல வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் முன்வந்தார்.
இதுதொடர்பாக, கடந்த ஆண்டு இறுதியில் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் புகழ்பெற்ற பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேக்கரின் நினைவிட திறப்பு விழாவின்போது, காம்ப்ளிக்கு உதவுவதாக கவாஸ்கர் உறுதியளித்திருந்தார். அதன்படி, கவாஸ்கர் தனது வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளார். கவாஸ்கரின் CHAMPS அறக்கட்டளை, காம்ப்ளிக்கு மாதந்தோறும் ரூ.30,000 தொகையை வழங்க இருக்கிறது. மேலும் ஆண்டுக்கு ரூ.30,000 மருத்துவ உதவியும் வழங்கப்பட இருக்கிறது.
மறுபுறம், கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா ஹெவிட், 2023ஆம் ஆண்டு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாகவும், ஆனால் தனது கணவரின் உதவியற்ற நிலையை பார்த்த பிறகு அதைத் திரும்பப் பெற முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் சூர்யன்ஷி பாண்டே நடத்திய பாட்காஸ்டின்போது இதை அவர் தெரிவித்துள்ளார். அதில் அவர், “நான் அவனை விட்டுப் பிரிந்தால் அவர் உதவியற்றவனாகிவிடுவார். அவர், ஒரு குழந்தையைப் போன்றவர். அது எனக்கு வலித்தது. அது என்னை கவலையடையச் செய்தது. நான் ஒரு நண்பனைக்கூட விட்டுப் பிரிய மாட்டேன், ஆனால் அவர், அதைவிட அதிகமாக இருக்கிறார். நான் விலகிச் சென்ற தருணங்கள் இருந்தன என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் பின்னர் நான் கவலைப்பட்டேன். அவர் சாப்பிட்டாரா இல்லையா? அவர் படுக்கையில் சரியாக இருக்கிறாரா? அவர் நலமாக இருக்கிறாரா? பிறகு நான் அவனைப் பார்க்க வேண்டியிருந்தது. அவருக்கு நான் தேவை என்பதை புரிந்துகொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.