இந்தியாவில் 18வது ஐபிஎல் தொடர் வேகம்பிடித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இப்போட்டியை பும்ராவின் மனைவி சஞ்சனா மற்றும் அவரது மகன் அங்கத் பும்ரா ஆகியோர் நேரில் கண்டுகளித்தனர். இந்த நிலையில், இந்தப் போட்டியில் அங்கத் பும்ரா அமைதியாக இருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
”ஏன் அங்கத் சிறிது சந்தோஷமாக இல்லமால் அமைதியாக இருக்கிறார்” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு பும்ரா மனைவி சஞ்சனா கணேசன் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில், "என் மகன் அங்கத் பும்ரா ஒரு வைரல் செய்தியாக ஆக்கப்படுவதில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை. ஆன்லைனில் உள்ளவர்கள் வெறும் 3 வினாடி வீடியோவை வைத்து அங்கத் யார்.. அவர் எப்படிப்பட்டவர் என தீர்மானிக்கின்றனர். Trauma, Depression போன்ற வார்த்தைகளை ஒன்றரை வயதான ஒரு குழந்தையின் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. எங்களின் மகனை பற்றியும், வாழ்க்கையை பற்றியும் உங்களுக்கு ஒன்றும் தெரியாது" எனப் பதிவிட்டுள்ளார்.