ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, 2025 ஐபிஎல் தொடரில் தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. வெளி ஆடுகளங்களில் புலிபோல் சீறிப்பாயும் ஆர்சிபி அணி விளையாடிய 5 ஆட்டங்களிலும் வென்று எப்போதும் இல்லாதவகையில் சாதனை படைத்துள்ளது.
அதேநேரத்தில் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருக்கும் அந்த அணி, கோப்பை வெல்லக்கூடிய அணியா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
100% முழு பலம் கொண்ட அணியாக பார்க்கப்பட்ட ஆர்சிபி அணி, சொந்த மண்ணில் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருக்கும் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன. ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் இல்லாததும், அவர்கள் கடைசி இரண்டு ஆட்டங்களில் மோசமான தோல்வியை சந்தித்திருப்பதும் ஆர்சிபி அணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இரண்டு அணிகளும் 32 முறை மோதியிருக்கும் நிலையில், ஆர்சிபி அணி 16 முறையும், ராஜஸ்தான் அணி 14 முறையும் வெற்றிபெற்றுள்ளது.
ஆர்சிபி அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்திருக்கும் நிலையில், இந்தபோட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களம்காணுகிறது.
சொந்த மண்ணில் 3 தோல்விக்கு பிறகு மீண்டுவர வேண்டுமானால் ஆர்சிபி அணியின் 2 வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் ஆர்சிபி கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
ஜியோஸ்டாரில் பேசியிருக்கும் அவர், “சின்னசாமி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த மூன்று போட்டிகளிலும் ஆர்சிபி அணி தடுமாறியது. பில் சால்ட் மற்றும் ரஜத் படிதர் போன்ற வீரர்கள் உள்ளே வந்து சுதந்திரமாக விளையாட வேண்டுமானால் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் அதிக நேரம் பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம்.
இது ஆடுகளத்தைப் பற்றியது அல்ல, சரியான பேட்டிங் அணுகுமுறையைப் பற்றியது. ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து ஆடுகளம் கடந்த போட்டிகளை போல அப்படியே இருந்தால், விராட் கோலி மற்றும் படிக்கல் இருவரும் அதை சரிசெய்து ரன்கள் எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.