விளையாட்டு

இந்தியா - இலங்கை இடையே டி20 தொடர் இன்று தொடக்கம் - வருண் சக்ரவர்த்தி களமிறங்க வாய்ப்பு

jagadeesh

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கொழும்புவில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்ற இந்தியா, 3 ஆவது ஒருநாள் போட்டியில் தோல்வி கண்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இன்றையப் போட்டியில் இந்திய டி20 அணியில் அறிமுக வீரராக தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி முதல் முறையாக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இளம் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல்லுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இவ்விரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13 இல் இந்தியாவும், 5 இல் இலங்கையும் வெற்றி கண்டன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.