விளையாட்டு

அபராஜித் அபாரம், ஏமாற்றிய முரளி விஜய்: வென்றது தமிழகம்!

webteam

கேரளாவுக்கு எதிராக நேற்று நடந்த முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 போட்டியில் தமிழக அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 37 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி, கேரள மாநிலம் தும்பாவில் நேற்று நடந்த தனது முதல் லீக் போட்டியில் கேரளாவை சந்தித்தது. 

முதலில் களமிறங்கிய தமிழக அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. முரளி விஜய், ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.  பாபா அபராஜித் 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து காயத்தால் வெளியேறினார். முகமது 11 பந்துகளில் 34 ரன்களும் கேப்டன் தினேஷ் கார்த்திக் 33 ரன்களும் எடுத்தனர். கேரள தரப்பில் பசில் தம்பி 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய கேரள அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் தமிழக அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக பந்து வீச்சாளர்கள் பெரியசாமி, டி.நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.