நான்கு ஆண்டுகள் இந்தியா டெஸ்ட் அணிக்கு கோலி கேப்டனாக இருந்து என்ன பயன் ? என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
இந்திய அணியின் இந்தத் தோல்வி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இந்திய அணஇ குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவித்துள்ளார் அதில் "இந்திய அணியில் 5 பிரத்யேக பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால், எல்லோரும் விராத் கோலியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். கோலியால் அனைத்து ஆட்டங்களிலும் சதமடிக்க முடியாது, அவரும் மனிதன்தான் இயந்திரம் அல்ல" என்று கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய கவாஸ்கர் "தோனியிடம் இருந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பு கோலியிடம் சென்றபோது இந்திய அணி நிச்சயம் வீழும் என பலரும் நினைத்தனர். ஆனால் கோலி தலைமையிலான அணி பல வெற்றிகளை கண்டு, டெஸ்ட்டில் நம்பர் ஒன் அணியாக திகழ்ந்தது. ஆனால், இப்போது ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படும் கோலி, கேப்டனாக சொதப்புகிறார்"
"முக்கியமாக வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் தோல்வி முகம் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் கேப்டனாக இருந்தாலும் இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுக்க கோலிக்கு தெரியவில்லை" என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.
இந்திய அணியின் பயிற்சியாளரும் தனது நண்பருமான ரவிசாஸ்திரி குறித்து கருத்து தெரிவித்த கவாஸ்கர் "கேப்டன் போலவே பயிற்சியாளரும் என்ன செய்வார் ? ஒட்டுமொத்த பேட்ஸ்மென்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோது வேறு என்ன செய்ய முடியும். ஆனால் கோலி இப்போது மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்,