விளையாட்டு

“இழந்த இடத்திற்கு மீண்டும் வந்துள்ளேன்” - ஸ்மித் நெகிழ்ச்சி

webteam

தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஊக்கத்தால், தான் இழந்த இடத்தை மீண்டும் அடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான ஸ்டீவன் ஸ்மித் ஆவார். முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் மற்றும் 2வது இன்னிங்ஸில் 142 ரன்கள் என இரட்டைச் சதம் அடித்து அவர் அசத்தினார். இதற்காக அவர் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஸ்மித், “மீண்டுமொரு ஆஷஸ் தொடரில் வெற்றி பெற்றது சிறப்பான ஒன்று. இங்கிலாந்தில் விளையாடுவது மிகவும் பிடித்திருக்கிறது. இந்தப் புறசூழல் பிரமாதமாக உள்ளது. எங்கள் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தொடரின் முதல் போட்டியிலேயே வென்றது ஊக்கமளிக்கிறது. ஆஸ்திரேலியா அணியில் மீண்டும் விளையாடுவதும், வெற்றியில் பங்குபெறுவதும் பெருமையாக இருக்கிறது.

நான் ஆஸ்திரேலியாவுக்காக முதல் சதத்தை அடிக்கும்போது எப்படி உணர்ந்தேனோ, அந்த அளவிற்கு தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன். 18 மாதங்கள் தடையில் இருந்தபோது எனது நண்பர்கள், குடும்பத்தினர் அளித்த ஊக்கத்தினால் மீண்டும் நான் இழந்த இடத்தை அடைந்துள்ளேன். எங்களின் இந்த வெற்றி தொடரும் என நம்புகிறேன்” என்றார்.