பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டன் டேவிட் வார்னரும் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கேப்டவுணில் நடந்து வருகிறது. நேற்று முன்றாம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமருன் பேன்கிராஃப்ட், மற்றும் கேப்டன் ஸ்மித் ஆகியோர் மஞ்சள் டேப் மூலம் பந்தை சேதப்படுத்தியது கேமரா மூலம் தெரியவந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேன்கிராஃப்ட், தனது தவறை ஒப்புக்கொண்டார். அணியில் உள்ள முக்கிய வீரர்கள் சிலர் திட்டமிட்டே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். இந்த தவறு தமக்கு தெரிந்தே நடந்ததாகக் கூறிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இனி தமது தலைமையில் இதுபோன்ற சம்பவம் தொடராது எனக் கூறினார்.
இதனிடையே இந்த செயலுக்கு, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிலர் கேப்டன் ஸ்மித் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்புல்லும் இதில் தொடர்புடைய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்நாட்டு அரசும் அவர்களை நீக்க முடிவு செய்திருந்தது.
(டிம் பெய்ன்)
இந்நிலையில் ஸ்மித்தும் துணை கேப்டன் டேவிட் வார்னரும் பதவி விலகியுள்ளனர். புதிய பொறுப்பு கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டியில் இருந்தே புதிய கேப்டனாக பெய்ன் செயல்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது. மெல்போர்னில் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்த, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.