விளையாட்டு

"இவ்வளவு குறைவான தொகைக்கு ஸ்மித் ஐபிஎல்லில் விளையாடாமலே இருக்கலாம்" - மைக்கல் கிளார்க்

jagadeesh

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் விளையாடமல் இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் அண்மையில் நடைபெற்றது. அதில் கடந்தாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.2.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஏலம் தொடங்குவதற்கு முன்னதாக ஸ்டீவ் ஸ்மித்தை தங்கள் அணியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவித்தது. இதனையடுத்து ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் அடிப்படை தொகையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. ஏலத்தின்போது ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.20 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலம் எடுத்தது. யாரும் பெரிதாக அவரை எடுக்க முன் வரவில்லை. அதனால் ஆரம்ப விலையில் இருந்து வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டுமே கூடுதலாக கேட்கப்பட்டது.

இதே ஸ்டீவ் ஸ்மித்தை கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கல் கிளார்க் "டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர் ஸ்டீவ் ஸ்மித். ஆனால் கடந்த ஐபிஎல் அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. ஆனால் இந்தாண்டு அவரை இவ்வளவு குறைவான தொகைக்கு ஏலம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இது நல்ல தொகைதான்" என்றார்.

மேலும் பேசிய அவர் "ஆனால், கடந்தமுறை ஒப்பிடும்போது இது குறைவுதான். மேலும் அவர் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். ஐபிஎல் போட்டிக்காக அவர் 8 வாரங்கள் இந்தியாவில் செலவிட வேண்டியிருக்கும். இந்த குறைவான தொகைக்காக அவர் கிட்டத்தட்ட தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பார் என எனக்கு தோன்றவில்லை. அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடமலே இருக்காலாம். ஸ்டீவ் ஸ்மித் தலைச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் இல்லையா. விராட் கோலிக்கு முதலிடம் என்றாலும் ஆனால் முதல் மூன்று இடங்களில் இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித்" என்றார் மைக்கல் கிளார்க்.