விளையாட்டு

பாக்.கில் திட்டமிட்டபடி இலங்கை அணி விளையாடும்: கிரிக்கெட் வாரியம் உறுதி!

பாக்.கில் திட்டமிட்டபடி இலங்கை அணி விளையாடும்: கிரிக்கெட் வாரியம் உறுதி!

webteam

பாகிஸ்தானில் நடைபெற உள்ள கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி திட்டமிட்டபடி பங்கேற்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடியது. அப்போது இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சில வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி, 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த தொடரில் பாதுகாப்பு கருதி பங்கேற்க விரும்பவில்லை என்று இலங்கை டி20 அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா, தனஞ்செய டிசில்வா, அகிலா தனஞ்செயா, லக்மல், சண்டிமல், டிக்வெல்லா, குசால் பெரேரா, கருணாரத்னே ஆகிய 10 வீரர்கள், இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தனர்.

இதையடுத்து இவர்கள் இல்லாமல்,லஹிரு திரிமன்னா, துஷான் ஷனகா தலைமையிலான ஒருநாள் மற்றும் டி20 அணிக ளை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

(கராச்சி மைதானம்)

இந்நிலையில், பாகிஸ்தான் செல்ல இருக்கும் தங்கள் அணிக்கு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இதையடுத்து நிலைமை குறித்து ஆராய இலங்கை பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியது. இதனால் இந்த தொடர் நடக்குமா என்று சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் திட்டமிட்டபடி, இலங்கை அணி பாகிஸ்தானில் நடக்கும் போட்டியில் பங்கேற்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு ஆபத்து ஏதும் நேராது என தங்கள் நாட்டு அரசு உறுதியளித்ததை தொடர்ந்து இம்முடிவை எடுத்ததாக வாரியம் தெரிவித்துள்ளது.