விளையாட்டு

கிரிக்கெட் வீரர்கள் உடலில் ஜிபிஎஸ் கருவி: புது முயற்சியில் இலங்கை!

கிரிக்கெட் வீரர்கள் உடலில் ஜிபிஎஸ் கருவி: புது முயற்சியில் இலங்கை!

webteam

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அவர்களின் திறன் மற்றும் உடல்தகுதியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கண்காணித்து வருகிறது.

பார்சிலோனா கால்பந்து வீரர்களின் உடல்திறனை அறிய செய்யப்பட்ட அதிநவீன முறை இது. இப்போது இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 75 ஆயிரம் அமெரிக்க டாலரை செலவு செய்துள்ளது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஆஷ்லே டி சில்வா கூறும்போது, ‘ 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்காக அணியைத் தயார் செய்யும் விதமாக ஏராளமான தொழில்நுட்பங்களையும், நவீன முறைகளையும் புகுத்தி வருகிறோம். இப்போது வீரர்கள் உடலில் பொருத்திருக்கும் ஜிபிஎஸ் கருவி, வீரர்களின் திறனை சிறப்பாக கண்டறிய உதவும். தற்போது நடந்துவரும் முத்தரப்பு டி20 போட்டிகளிலேயே இந்த முறையை செயல்படுத்த தொடங்கிவிட்டோம்’ எனத் தெரிவித்தார்.

இந்த ஜிபிஎஸ் கருவி இலங்கை வீரர்களின் முதுகுப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. அதில் இருந்து நீலம் மற்றும் பச்சை நிறத்தில் ஒளி மின்னும். இதன் மூலம் வீரர்களின் உடல்தகுதி, திறனை ஓய்வறையில் இருந்தே பயிற்சியாளர் கண்காணிக்க முடியும். வீரர்கள் களத்தில் இருக்கும் போது, எத்தனை மீட்டர் ஓடினார்கள், பந்துகளை எப்படி வீசினார்கள், பீல்டிங் செய்யும் போது, எப்படி செயல்பட்டார்கள் என்பதை இந்த கருவி கண்காணிக்கும்.

இலங்கை அணியின், பீல்டிங் பயிற்சியாளர் நிக் போத்தாஸ் இந்த தொழில்நுட்பத்தை இலங்கை அணிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.