விளையாட்டு

டி20 கிரிக்கெட்: இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இலங்கை

jagadeesh

இந்தியாவிற்கு எதிரான 2-ஆவது 20 ஓவர் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இலங்கை அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியை இந்தியா வென்ற நிலையில் 2-ஆவது போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இந்திய வீரர் குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதியானதால், அவரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் இப்போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்திய அணியில் தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சக்காரியா, நிதிஷ் ராணா ஆகியோர் முதல் முறையாக இடம் பிடித்தனர்.

முதலில் பேட் செய்த இந்திய அணி, இலங்கை வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் ரன் குவிக்க முடியாமல் திணறியது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 21 ரன்னும், கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்னும் எடுத்தனர். படிக்கல் 29 ரன் எடுத்தார், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில் இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் மட்டுமே எடுத்தது.

அடுத்து ஆடிய இலங்கைக்கு தொடக்க வீரர் மினோத் பானுக 36 ரன் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்தார். கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்ட நிலையில், அதை அந்த அணி 4 பந்திலேயே எடுத்து இலக்கை எட்டியது. 40 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த தனஞ்சய டிசல்வா ஆட்ட நாயகன் ஆனார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில் கடைசி போட்டி இன்று நடக்கிறது