ஆயுள் தடை விதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் எந்த நாட்டுக்காகவும் விளையாட முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்புத் தலைவர் கூறினார்.
2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார் ஸ்ரீசாந்த். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் ஆதாரமில்லை என்று கூறி அவரை விடுவித்தது. இருந்தும் வாழ்நாள் தடையை நீக்க, இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்தது. அதை நீக்கக் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மனு செய்தார். விசாரித்த நீதிமன்றம், தடையை நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்தது. விசாரித்த நீதிமன்றம், கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுள் தடை தொடரும் என்றும் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாது என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஸ்ரீசாந்த் அளித்த பேட்டி ஒன்றில், ‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனக்கு தடை விதிக்கவில்லை. அதனால் வேறு நாட்டுக்காக ஆடுவேன்’ என்று கூறியிருந்தார்.
இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்புத் தலைவர் சிகே. கண்ணா கூறும்போது, ’ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட வீரர், மற்ற நாடுகளில் விளையாட முடியாது. இது ஐசிசி சட்டதிட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் ஸ்ரீசாந்த் எங்கும் விளையாட முடியாது’ என்று கூறினார்.