விளையாட்டு

“கடின உழைப்பு நல்ல பயனை தரும்” - சிந்துவை வாழ்த்திய பி.டி.உஷா

webteam

உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவிற்கு இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சுவிட்சர்லாந்தின் பாசில் நகரில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை எதிர்த்து பி.வி.சிந்து களம் கண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே பி.வி.சிந்து ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 21-7, 21-7 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தியா சார்பில் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்ற வீராங்கனை என்ற சாதனையை இதன்மூலம் பி.வி.சிந்து படைத்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பி.வி.சிந்துவிற்கு இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “விளையாட்டில் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருக்கும் போது, அது நல்ல பயனை தரும். பி.வி.சிந்துவின் இந்த வெற்றி வரும் காலத்தில் பல வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும். பி.வி.சிந்துவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதவிட்டுள்ளார்.