விளையாட்டு

நெல்லையில் கோலாகலமாக நடந்த தென் மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகள்

webteam

இளையரசனேந்தல் இரண்டாம் பாகம் ஜமீன்தார் அப்பாசாமி நாயுடு மற்றும் ம.தி.தா பூப்பந்தாட்ட கழகம் இணைந்து நடத்திய தென் மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகள் நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து மேல்நிலை பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் கூடங்குளம், உடன்குடி, வாசுதேவநல்லூர், வள்ளியூர் என திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 18 அணிகள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய போட்டிகள் மாலை 5 மணிவரை நடைபெற்றது. போட்டிகளை நெல்லை மாநகர முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

19 வயதுக்கு உட்பட்ட அணிகள் மோதிக்கொண்ட போட்டிகளில், முதல் இடத்தை தூத்துக்குடி அணியும் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை கூடங்குளம் அணிகளும் பெற்றன. இதேபோல் 55 வயதுக்கு மேற்பட்டோர் ஆடிய போட்டிகளில் முதல் இடத்தை வாசுதேவநல்லூர் அணியும், இரண்டாவது இடத்தை உடன்குடியும், 3 வது இடத்தை வள்ளியூர் அணியும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளியின் செயலர் செல்லையா மற்றும் பாளையங்கோட்டை முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.

- நெல்லை நாகராஜன் | நாராயணமூர்த்தி.