விளையாட்டு

"தொடக்க வீரராக சுப்மன் கில் களமிறங்க வேண்டும்"-சுனில் கவாஸ்கர்!

jagadeesh

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி 17-ஆம் தேதி நடைபெறுகிறது. அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக இது நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மயங்க் அகர்வால் உடன் தொடக்க வீரராக பிருத்வி ஷா களமிறங்குவாரா அல்லது சுப்மன் கில் களமிறங்குவாரா என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்தப் பேட்டியில் "மயங்க் அகர்வால் உடன் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதுதான் சரியாக இருக்கும். பயிற்சிப் போட்டியில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடினார். நல்ல பார்மில் இருக்கிறார். அவரின் ஆட்டத்தை நேரில் பார்த்த ஆலன் பார்டன் சுப்மன் கில் ஆட்டத்தை பார்த்தார். அவரின் ஆட்டம் மிகவும் கவர்ந்துவிட்டதாக கூறினார். நானும் அதைதான் சொல்கிறேன். முதல் டெஸ்ட்டில் சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாட வேண்டும்" என்றார்.

ஆலன் பார்டர் பேசுகையில் "சுப்மன் கில் ஆட்டத்தை சிட்னியில் பார்த்தேன். அவரின் ஆட்ட நுணுக்கங்கள் சிறப்பாக இருக்கிறது. அவர் மிகவும் இளம் வீரர். அதிரடியாக விளையாடலாம். ஆனால் அவர் பொறுப்புணர்வுடன் விளையாடுகிறார். அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. நான் இந்திய தேர்வுக்குழுவில் இருந்தால் பிருத்வி ஷாவுக்கு பதிலாக சுப்மன் கில்லை ஆடும் அணியில் சேர்ப்பேன்" என்றார் அவர்.