விளையாட்டு

“முதல் சதத்தை சென்னைக்கு எதிராக அடித்ததில் மகிழ்ச்சி” - தவான்

webteam

சென்னை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற போட்டியில் தனது முதல் சதத்தை அடித்ததில் மகிழ்ச்சி என ஷிகர் தவான் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ரன்களை குவித்தது. அதனை எதிர்த்து ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியது.

தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 101 ரன்களை விளாசினார். இது அவர் ஐபிஎல் தொடரில் அடித்த முதல் சதமாகும். 13வது ஆண்டாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் தவான், முதல் முறையாக சதம் அடித்ததால் நெகிழ்ச்சி அடைந்தார்.

சதம் அடித்தது தொடர்பாக பேசிய அவர், “13 வருடங்களுக்குப் பின்னர் ஐபிஎல் தொடரில் சதம் அடித்தில் மிகவும் மகிழ்ச்சி. நான் 80 ரன்கள், 90 ரன்களை கடந்திருக்கிறேன். ஆனால் சென்னை அணிக்கு எதிரான சேஸிங்கில் வெற்றி பெறுவதற்காக எனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.