விளையாட்டு

விமான நிலையத்தில் மனைவி, குழந்தைகளை பிரிந்த தவான்

webteam

இந்திய கிரிக்கெட் அணியுடன் தென்னாப்ரிக்கா சென்றபோது, ஷிகர் தவானின் மனைவியும், 2 குழந்தைகளும் துபாய் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

தென்னாப்ரிக்கா தொடரில் பங்கேற்க மனைவி மற்றும் குழந்தைகளுடன் தவான் துபாய் விமான நிலையம் சென்றார். அப்போது சிறுவர்களுக்கான வயதுச் சான்றிதழ் தொடர்பான ஆவணங்கள் இல்லை எனக்கூறி அவரின் மனைவிக்கும், 2 குழந்தைகளுக்கும் விமான நிலைய ஊழியர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் மனைவி மற்றும் குழந்தைகளை பாதி வழியில் விட்டுவிட்டு ஷிகர் தவான் சக வீரர்களுடன் தென்னாப்ரிக்கா சென்றார். பின்னர் தவானின் குடும்பத்தினர் உரிய ஆவணங்களுக்காக துபாயில் காக்க வைக்கப்பட்டனர். 

இச்சம்பவம் தொடர்பாக தவான் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஆவணங்கள் தொடர்பாக மும்பையில் விமானத்தில் ஏறும்போதே, விமான நிறுவனத்தினர் கேட்க வேண்டியது தானே என்று தனது ஆதங்கத்தை ட்விட்டரில் தவான் பதிவிட்டுள்ளார். தென்னாப்ரிக்காவுடனான தொடர் 56 நாட்கள் சுற்றுப் பயணம் என்பதால் விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்ட பலரும் தங்கள் குடும்பத்தினரை உடன் அழைத்துச் சென்றுள்ளனர்.