விளையாட்டு

ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய தவான் : அபார சதம்

webteam

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 14வது லீக் போட்டி இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வருகிறது. லண்டன் கென்னிங்டான் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

ஸ்டார்க் வீசிய 2வது ஓவரின் மூன்றாவது பந்தை ரோகித் அடித்தார். அது ஆஸ்திரேலிய பவுலர் கோல்டர் நைல் அருகே செல்ல, அவர் அதை பாய்ந்து பிடிக்க பார்த்தார். ஆனால் கேட்ச் மிஸ் ஆனது. இதனால் ரோகித் மறு வாய்ப்பு பெற்றார். இதையடுத்து அடிக்கத் தொடங்கிய தவான் ரன்களை உயர்த்தினார். ஒரு கட்டத்தில் இருவரும் அரை சதத்தை கடக்க, ஆஸ்திரேலியா விக்கெட்டை எடுக்கமுடியாமல் திணறியது. இந்திய அணியின் ஸ்கோர் 127 ரன்களில் இருக்கும் போது, ரோகித் ஷர்மா 57 (70) ரன்களில் கோல்டர் நைல் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கோலியுடன் சேர்ந்து விளையாடிய தவான் அதிரடியை தொடர்ந்தார். மேலும், 95 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.