விளையாட்டு

டிரெஸ்சிங் ரூம் கண்ணாடியை உடைத்த கிரிக்கெட் வீரர் அடையாளம் தெரிந்தது!

டிரெஸ்சிங் ரூம் கண்ணாடியை உடைத்த கிரிக்கெட் வீரர் அடையாளம் தெரிந்தது!

webteam

இலங்கை பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் டிரெஸ்சிங் ரூம் கண்ணாடியை உடைத்த பங்களாதேஷ் வீரர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்து வந்தது. 16-ம் தேதி நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதின.

 முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் தமீம் இக்பால் 50 ரன்கள் சேர்த்து அணியை இறுதி கட்டத்துக்குச் கொண்டு சென்றார். கடைசியில் அதிரடியாக விளையாடிய மஹமத்துல்லா, 18 ப‌ந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதனால் அந்த அணி திரில்லிங் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியின் கடைசி ஓவரை இலங்கை வீரர் உதனா வீசினார். முதல் பந்து பவுன்சராக, பங்களாதேஷ் வீரர் முஷ்தாபிஷூர் ரகுமான் தோள்பட்டைக்கு மேல் சென்றது. நோ-பால் கொடுக்கவில்லை. இரண்டாவது பந்தும் அதே மாதிரி உயரத்தில் சென்றது. லெக் அம்பயர் நோ பால் சிக்னல் கொடுத்தாராம். அதை நடுவர் கவனிக்கவில்லை. மஹ்முதுல்லா நடுவர்களிடம் நோ-பால் கொடுக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார். அப்போது தண்ணீர் பாட்டில் கொண்டு வந்த பங்களாதேஷ் மாற்றுவீரர், நூருல் ஹசன் இலங்கை கேப்டன் திசாரா பெரேராவிடம் ஏதோ கோபமாகச் சொன்னார். இதனால் இலங்கை வீரர் ஒருவர் அவரை தள்ளினார். இது மோதலாக மாறியது.


 

டிரெஸிங் ரூமில் இருந்த பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன், மைதானத்துக்கு வெளியே வந்து ஏதோ கத்தினார். பின்னர் ’ஆட வேண்டாம், வெளியே வாருங்கள்’ என்று வீரர்களை வரச் சொன்னார். இதையடுத்து பரபரப்பானது. பின்னர் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தர் மஹமுத்துல்லா. இதையடுத்து மைதானத்துக்குள் ஓடி வந்த பங்களாதேஷ் வீரர்கள், பாம்பு நடனம் ஆடி, கத்தினர். 

இலங்கை வீரர் குசல் மெண்டிஸ், பங்களாதேஷ் வீரர்களை நோக்கி கோபமாகச் திட்டினார். அவரை பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால் சமாதானம் செய்தார். இதனால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. தெருச் சண்டை போல இது நடந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 


இதற்கிடையே, பங்களாதேஷ் டிரெஸ்சிங் ரூமில் இருந்த வீரர்கள் சிலர், அறையின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இது அங்குள்ள கேமராவில் பதிவானது. பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம், அதற்கான இழப்பீட்டை சரி செய்வதாகத் தெரிவித்தது. 

இந்த பிரச்னை பற்றி விசாரித்த ஐசிசி, பங்களாதேஷ் கிரிக்கெட் கேப்டன் ஷகிப் அல் ஹசன், இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் ஆகியோருக்கு போட்டிக்கட்டணத்தில் 25 சதவிகிதத்தை அபராதமாக விதித்தது.

இந்நிலையில் போட்டி நடுவர் கிறிஸ் பிராட், சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தினார். அப்போது கேட்டரிங் பிரிவில் இருந்த ஊழியர்களிடம் விசாரித்த போது, பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தான் ஆவேசத்தில் கண்ணாடியை தள்ளினார் என்றும் அதனால்தான் அது உடைந்தது என்றும் தெரிவித்தனர். இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்று இலங்கையில் இருந்து வெளிவரும் ’The Island’ என்ற பத்திரிகை செய்து வெளியிட்டுள்ளது.