நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் வரிசையில் பங்களாதேஷ் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் முதலிடத்துக்கு முன்னேறினார்.
உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தொடக்கம் முதலே அசத்தலான ஃபார்மில் உள்ள ஷகிப் அல் ஹசன் 2 சதங்கள், மற்றும் 3 அரைசதங்களை விளாசியுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று களமிறங்கிய ஷகிப், வழக்கமான பாணியில் விளையாடி 51 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் நடப்பு தொடரில் அதிக ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் வார்னரை, ஷகிப் பின்னுக்குத் தள்ளினார். ஷகிப் 476 ரன்களுடன் முதலிடத் திலும், 447 ரன்களுடன் வார்னர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
அதுமட்டுமின்றி உலகக்கோப்பை போட்டிகளில், ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையையும் ஷகிப் நிகழ்த்தினார். அவர் நேற்றைய போட்டியில் 35 ரன்னை எட்டிய போது இந்த சாதனையை படைத்தார். ஷகிப், உலக கோப்பை போட்டியில் இதுவரை 27 ஆட்டங்களில் ஆடி 1,016 ரன்கள் எடுத்துள்ளார்.
அதோடு உலகக் கோப்பை போட்டிகளில், அரைசதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்தி ஆல் ரவுண்ட் சாதனையையும் ஷகிப் படைத்தார். இதற்கு முன் இந்தியாவின் கபில்தேவ், யுவராஜ் சிங் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.