விளையாட்டு

சாதனை படைத்த ஷோயப் மாலிக்... ட்விட்டரில் உருகிய சானியா மிர்சா

EllusamyKarthik

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த 2008-இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

தற்போது 38 வயதாகும் மாலிக் கடந்த 1999ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

டி20 போட்டிகளின் வரவுகளுக்கு பிறகு பல்வேறு நாடுகளின் டி20 தொடர்களில்  விளையாடி வரும் மாலிக் அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரான ‘நேஷனல் டி20 கோப்பை’ தொடரில் KHYBER PAKHTUNKHWA அணிக்காக 44 பந்துகளில் 74 ரன்களை குவித்தார்.அதன் மூலம் ஆசியாவிலேயே டி20 போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற மைல் கல்லை எட்டியுள்ளார் ஷோயப் மாலிக். 

தனது புதிய சாதனைக்காக மாலிக் அவரது குடும்பம், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லியுள்ள நிலையில் கணவரின் சாதனையை பாராட்டை ட்விட்டரில் மனம் உருகி ட்வீட் போட்டுள்ளார் சானியா மிர்சா.

“உங்களது நீண்ட நெடிய அனுபவம், பொறுமை, விடா முயற்சியுடன் கூடிய கடின உழைப்பு, தியாகம் மற்றும் நம்பிக்கையை கண்டு பெருமை கொள்கிறேன்” என அதில் சொல்லியுள்ளார் சானியா மிர்சா.

சர்வதேச அளவில் கிறிஸ் கெய்ல் மற்றும் பொல்லார்டுக்கு அடுத்தபடியாக பத்தாயிரம் ரன்களை ஷோயப் மாலிக் மூன்றாவது வீரராக எட்டியுள்ளார்.