விளையாட்டு

மீண்டும் கோபிசந்த்திடம் பயிற்சி பெற சாய்னா முடிவு

rajakannan

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தற்போதைய பயிற்சியாளர் விமலிடம் இருந்து பிரிந்து மீண்டும் கோபிசந்திடம் பயிற்சி பெற உள்ளார்.

கோபி சந்திடம் பயிற்சி பெற்றுவந்த சாய்னா, கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் பெங்களூருவில் உள்ள விமல் குமார் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற சென்றார். விமலின் பயிற்சியின் கீழ் சாய்னா 2015, 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்நிலையில் மீண்டும் கோபிசந்திடம் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை, தமது ட்விட்டர் பக்கத்தில் சாய்னா தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் உலகச் சாம்பியன் போட்டியில் இருமுறை பதக்கம் மற்றும் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற ‌உதவியாக இருந்த பயிற்சியாளர் விமல் குமாருக்கு நன்றி தெரிவிப்பதாக சாய்னா குறிப்பட்டுள்ளார்.

பயிற்சிக்காக தமது சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு மீண்டும் திரும்ப உள்ளதாகவும், நண்பர்கள் தனக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.