விளையாட்டு

‘டியர் சச்சின் அங்கிள்’- 6 வயது சிறுமியின் நெகிழ்ச்சி கடிதம்

rajakannan

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு 6 வயது சிறுமி எழுதியுள்ள கடிதம் அவரை நெகிழவைத்துள்ளது.

சச்சின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். சச்சின் ஓய்வு பெற்ற போதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அவருடைய பெயரும் இன்றும் வலம் வந்து கொண்டுதான் உள்ளது. 

சமூக வலைதளங்களில் சச்சின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தனது ரசிகர்கள் எழுதும் கடிதங்களை அவ்வவ்போது ஷேர் செய்து அவர்களை ஊக்கப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனிடையே சமீபத்தில் தாரா என்ற 6 சிறுமி தனக்கு எழுதியக் கடிதத்தை சச்சின் பகிர்ந்துள்ளார். ‘டியர் சச்சின் அங்கிள்’என்ற தலைப்பிட்டு அந்தக் கடிதம் தொடங்குகிறது. தாரா என்ற தனது பெயரை சச்சின் மகளாக சாரா உடன் ரிதமிக்காக ஒப்பிட்டு எழுதியிருந்தார். 

அந்தக் கடிதத்தில், “என்னுடைய பெயர் தாரா(சாரா போல). ஆனால் எனக்கு 6 வயது. சமீபத்தில் நான் உங்களுடைய திரைப்படத்தைப் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் சிறு வயதில் சுட்டிப் பயனாக இருந்ததை பார்த்து நான் சிரித்தேன்.

உங்களது கடைசி போட்டியை பார்த்தபோது நான் அழுதுவிட்டேன். சச்சின் அங்கிள் நான் உங்களை, சாரா, அர்ஜூன் மற்றும் அஞ்சலி ஆண்ட்டி எல்லோரையும் வந்து பார்க்க விரும்புகிறேன்.  பார்க்க முடியுமா..?”

இந்தக் கடிதத்தை பதிவிட்ட சச்சின், “ஹாய் தாரா! எனக்கு கடிதம் எழுதியதற்கு நன்றி. எனது படத்தை பார்த்து நீ மகிழ்ச்சி அடைந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உனது சிரிப்பு நீடிக்கட்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக, சச்சினின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற படம் கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.