நமது நேர்த்தியான நடத்தையை நமது பலவீனமாக கருதிவிடக் கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதைத்தொடர்ந்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லை யொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய விமானப்படை இன்று வீசியுள்ளது. இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் 'நமது வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர், “நமது நேர்த்தியான நடத்தையை நமது பலவீனமாக கருதிவிடக்கூடாது. இந்தியா விமானப் படைக்கு நான் தலை வணங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் விரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ரஹானே ஆகியோரும் இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுரேஷ் ரெய்னா, “பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்தத் தாக்குதல் தகுந்த பதிலடி” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஹானே, “இந்தியா பயங்கரவாதிகளுக்கு எதிராக தகுந்த செயலை நடத்தியுள்ளது. அதற்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.