விளையாட்டு

பெய்ஜிங் ஒலிம்பிக் - ஊக்கமருந்து சர்ச்சையால் ரஷ்ய வீராங்கனைக்கு பதக்கம் நிறுத்தி வைப்பு

ஜா. ஜாக்சன் சிங்

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரின் ஃபிகர் ஸ்கேட்டிங் (Figure Skating) போட்டியில் முதலிடம் பிடித்த ரஷ்ய வீராங்கனை மீது ஊக்க மருந்து சர்ச்சை எழுந்ததால், அவரது பதக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ஃபிகர் ஸ்கேட்டிங் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் 15 வயது வீராங்கனை கமிலா வலைவா முதலிடம் பிடித்தார்.

இதனிடையே, போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீராங்கனைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஊக்க மருந்து சோதனையில், கமிலா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். அந்தப் போட்டியில் 82.16 புள்ளிகளுடன் அவர் முதலிடம் பிடித்தார். இவரது சக நாட்டு வீராங்கனை அன்னா ஸ்கெர்பக்கோவா 80.2 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், ஜப்பானின் கோரி சகாமோட்டோ மூன்றாமிடமும் பிடித்தனர்.

இந்நிலையில், நாளை நடைபெறும் இறுதிச் சுற்றிலும் கமிலா முதலிடம் பிடிப்பார் எனக் கூறப்படுகிறது. ஆனால், அவர் மீதான ஊக்கமருந்து சர்ச்சை தெளிவாகும் வரை அவருக்கான பதக்கம் நிறுத்தி வைக்கப்படும் என ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.