விளையாட்டு

அஷ்வினின் திண்டுக்கல் அணி வெற்றிக்கு பூட்டுப் போட்ட திருச்சி !

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ‘டி.என்.பி.எல்.’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த முதல் போட்டியில் ரவிசந்திரன் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியரஸ் அணியும் மோதியது. 


 
திருநெல்வேலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டியது. அந்த அணியில் அதிகபட்சமாக ராமலிங்கம் ரோகித் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 46 ரன்கள் சேர்த்தார். இறுதியில் திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்தது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியில், பரத் ஷங்கர் மற்றும் பாபா இந்திரஜித் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் பாபா இந்திரஜித் 14(9) ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து பரத் ஷங்கருடன் அரவிந்த் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

ஆனால் துரதிஷ்டவசமாக 39 ரன்னில் பரத் ஷங்கர் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து கணபதி, அரவிந்த், மணி பாரதி என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து தள்ளாடியது திருச்சி. அதன் பிறகு களமிறங்கிய சுரேஷ் குமார் மற்றும் சோனு யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தினர். அப்போது சோனு யாதவ் 30(17) ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சஞ்சய், தனது அதிரடியின் மூலம் வெற்றிக்கு வித்திட்டார்.

கடைசியில் சுரேஷ் குமார் 45(24) ரன்களும், சஞ்சய் 11(5) ரன்களும் எடுத்து இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இறுதியில் திருச்சி அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.