இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியில் மழையே பொழியாதே என இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா வானை நோக்கி கூறியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில், ரோஹித் 95 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது, தூரல் விழத் தொடங்கியது. உடனே வானை நோக்கி பார்த்த அவர், மழையே இப்போது வராதே எனக் கூறினார். பின்னர் சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மா, தனது 6 ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்பு ரோகித் சர்மாவும், ரஹானேவும் களத்தில் நின்று நிதானமாகவும் சரியான பந்துகளை விளாசியும் சரிந்த அணியை தூக்கி நிறுத்தினர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, பீடிட் பந்தை சிக்சருக்குத் தூக்கி, அபார சதமடித்தார்.
இது அவருக்கு 6 வது டெஸ்ட் சதம். இந்த தொடரில் அவர் அடித்துள்ள 3 வது சதம் இதுவாகும். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரஹானே அரைசதம் கடந்து அசத்தினார். இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.