நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 5-ம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது. 2-வது போட்டி ஆக்லாந்தில் 8-ம் தேதியும், 3-வது போட்டி மவுண்ட் மவுங்கானுயில் 11-ம் தேதியும் நடைபெற உள்ளது. அதன்பின் முதல் டெஸ்ட் வெலிங்டனில் 21ம் தேதியும், 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் 29ம் தேதியும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த ரோகித் முழுமையாக குணமடையாததால் போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள பிசிசிஐ, ''நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்களில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் களமிறங்குவார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி டி20 போட்டியின்போது 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரோகித் சர்மாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ரிடையர்ட் ஹர்ட் முறையில் அவர் பெவிலியன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.