விளையாட்டு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட்?

jagadeesh

இங்கிலாந்தில் இருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதி எனத் தகவல் வெளியான நிலையில், அதில் பாதிக்கப்பட்ட வீரர் ஒருவர் ரிஷப் பன்ட் என இப்போது செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்து பயணம் செய்தது. நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. பின்பு அங்கேயே தங்கியிருந்து ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணியினர் அனைவரும் இங்கிலாந்தில் தங்களது குடும்பத்துடன் தங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 வீரர்களும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் இருவருக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு 10 நாள்கள் கழித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு வீரருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.

இதனையடுத்து மற்றொரு வீரர் தன்னுடைய 10 நாள் தனிமைப்படுத்துதலை ஜூலை 18-ஆம் தேதி நிறைவு செய்கிறார். அப்போது மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த வீரர் இந்திய டெஸ்ட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் என தெரியவந்துள்ளது. இங்கிலாந்து - ஜெர்மனி நாடுகள் இடையே நடைபெற்ற யூரோ கோப்பை போட்டியை நேரில் கண்ட ரிஷப் பன்ட், அங்கு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.