விளையாட்டு

பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூர்!

EllusamyKarthik

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 164 ரன்களை குவித்தது அந்த அணி. மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் எடுத்திருந்தார். 

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் விரட்டியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் வழக்கம் போல சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் 91 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸின் 11-வது ஓவரில் பெங்களூர் வீரர் ஷாபாஸ் அகமது, ராகுலை அவுட் செய்தார். 

அந்த விக்கெட் பெங்களூர் அணியின் பக்கம் ஆட்டத்தை திருப்பியது. நிக்கோலஸ் பூரன், மயங்க் அகர்வால், சர்பராஸ் கான் என மூவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மூவரையும் சாஹல் அவுட் செய்திருந்தார். மயங்க் 42 பந்துகளில் 57 ரன்களை எடுத்து அவுட்டானார். 16 ஓவர்கள் முடிவில் 121 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்தது பஞ்சாப். 

தொடர்ந்து மார்க்ரம் அவுட்டானார். கடைசி ஓவரில் ஷாருக்கான் ரன் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது பஞ்சாப். இந்த வெற்றியின் மூலம் கோலி தலைமையிலான பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.