விளையாட்டு

வேகநடையில் முதலிடம் பிடித்த தமிழக எஸ்.ஐ.. உலக அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு

webteam

மணிப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான 5000 மீட்டர் வேகநடை போட்டியில் முதலிடம் பிடித்த காவல் உதவி ஆய்வாளர், கனடாவில் நடைபெறும் உலக அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

தேசிய அளவிலான 41-ஆவது மூத்தோர் தடகளப் போட்டி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பாலில் நடைபெற்றது. கடந்த 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் தேசிய அளவில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் ராஜபாளையம் மொட்டை மலையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, 5000 மீட்டர் வேக நடை போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். இவர் பந்தயத் தூரத்தை 28 நிமிடம் 30 வினாடிகளில் கடந்தார். 2-ஆம் இடத்தை கர்நாடகாவும், 3-ஆம் இடத்தை அசாம் மாநிலமும் பிடித்தது.

முதலிடம் பிடித்த காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வருகின்ற ஆகஸ்ட் மாதம் கனடாவில் நடைபெற உள்ள உலக அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்க இருக்கிறார். முதலிடம் பிடித்த கிருஷ்ணமூர்த்திக்கு காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.