விளையாட்டு

இந்திய-தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் தாமதம்

webteam

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக தாமதமாகி உள்ளது. 

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி பங்கேற்கிறது. இதில் முதல் டி20 போட்டி தர்மசாலாவில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்கவிருந்தது.

இந்நிலையில் மழை காரணமாக போட்டி தாமதமாகி உள்ளது. இன்று மதியம் வரை மழை பெய்து வந்ததால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. அத்துடன் தற்போது மழை பெய்து வருவதால் ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை அவ்வப்போது பெய்து வருவதால் ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

கடந்த இருநாட்களாக பெய்த வந்த மழை காரணமாக இந்திய அணியின் வலைப்பயிற்சியும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இந்திய அணி உள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. ஆகவே இந்தத் தொடர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தீர்மானிப்பதற்கு முக்கியமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.