விளையாட்டு

‘திராவிட் இரட்டை பதவி ஆதாய புகாரில் உண்மையில்லை’ - சிஓஏ விளக்கம்

webteam

ராகுல் திராவிட் மீது இரட்டை பதவி ஆதாயம் எதுவும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் நிர்வாக கமிட்டியான சிஓஏ தெரிவித்துள்ளது.  


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி டி.கே.ஜெயின் இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் திராவிட்டிற்கு நோட்டீஸ் அளித்திருந்தார். இந்த நோட்டீஸில் திராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணிபுரிந்து வரும் போது எவ்வாறு இந்தியா சிமெண்ட்ஸில் துணை தலைவராக இருக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஏனென்றால் இந்தியா சிமெண்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறது. எனவே இது குறித்து திராவிட் விளக்கம் அளிக்க 2 வாரங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் ராகுல் திராவிட் மீது இரட்டை பதவி ஆதாயம் எதுவும் இல்லை என்று இந்திய கிரிக்கெட்டை நிர்வாகித்து வரும் கமிட்டி ஆஃப் அட்மினிஸ்டிரேட்டர்ஸ் (சிஓஏ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஓஏ நிர்வாகி, “ராகுல் திராவிட் மீது இரட்டை பதவி ஆதாயம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. பிசிசிஐயின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி திராவிட் மீது இரட்டை பதவி ஆதாயம் இருப்பதாக கண்டுபிடித்தால் அவருக்கு எங்களது விளக்கத்தை தெரிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.