விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி: அரையிறுதி வாய்ப்பை இழந்தார் பி.வி.சிந்து!

jagadeesh

உலக பேட்மிண்டன் போட்டித் தொடரில் பங்கேற்ற முதல் இரண்டுப் போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்தார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இருப்பவர்கள் மட்டும் பங்கேற்கும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

இதில், பெண்கள் ஒற்றையரில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் தாய் ஜூ யிங்கை சந்தித்தார். 59 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கடும் போராட்டத்துக்கு பிறகு கைப்பற்றிய (21-19) சிந்து அடுத்த 2 செட்களையும் 12-21, 17-21 என்ற கணக்கில் இழந்து தோல்வியை சந்தித்தார்.

இதனையடுத்து இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் சிந்து, தாய்லாந்து வீராங்கனையான முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 19-21, 13-21 என்ற நேர் செட்களில் ராட்சனோக்கிடம் தோல்வியடைந்தார் பி.வி.சிந்து. இந்தப் படுதோல்வி காரணமாக அரையிறுதி வாய்ப்பை இழந்தார் சிந்து.