விளையாட்டு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த பஞ்சாப் விவசாயியின் 19 வயது மகன்!

EllusamyKarthik

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார், பஞ்சாபை பூர்விகமாக கொண்டுள்ள ஜோகா சிங் சங்காவின் 19 வயது மகன் தன்வீர் சங்கா. வரும் பிப்ரவரியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார் தன்வீர் சங்கா. அவர் லெக் ஸ்பின்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

“அணியில் நான் விளையாட தேர்வாகியுள்ளேன் என்ற செய்தியை அறிந்ததும் நான் நிலவை தொட்டு விட்டதாகவே உணர்ந்தேன். அதை நிஜம் என்று நம்ப சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். 19 வயதில் விளையாட வாய்ப்பு கிடைப்பதெல்லாம் வரம்” என அணியில் தேர்வாகியுள்ள அனுபவத்தை பகிர்கிறார் தன்வீர். 

இந்திய பூர்வீகத்தை சேர்ந்தவர்கள் உள்ளூர் அளவிலும், அண்டர் 19 அணிக்காகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் விளையாடி இருந்தாலும் தேசிய அணியில் சர்வதேச போட்டியில் விளையாட இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலிய அணியில் தேர்வாவது இது இரண்டாவது முறை. 

1997இல் தன்வீரின் பெற்றோர்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். அவரது அப்பா முதலில் அங்கு விவசாய வேலைகளை செய்துள்ளார். இப்போது வாடகை கார் ஓட்டி வருகிறார். அவரது அம்மா உப்நீத் கணக்கராக பணியாற்றி வருகிறார்.